மியான்மரில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அந்நாட்டு இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கை எடுத்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு மியன்மாருக்கான ஐ.நா. தூதுவர் க்யாவ் மோ துன் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மியான்மர் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான எந்த வழியையும் பயன்படுத்துமாறும் அவா் கோரியுள்ளார்.
மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழுவை எந்த நாடும் அங்கீகரிக்கக் கூடாது. அங்கு ஜனநாயகத்தை மீள நிலை நிறுத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் க்யாவ் மோ துன் வலியுறுத்தினார்.
இராணுவ சதியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அப்பாவி மக்களை ஒடுக்குமுறையில் இருந்து பாதுகாக்கவும் ஜனநாயகத்தை உறுதி செய்யவும் சர்வதேசம் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாகத் தெரிவித்த அவர், மியான்மரில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சா்வதேச சமூகத்தின் மேலும் வலுவான நடவடிக்கை தேவை என்றார்.
மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், அரச தலைவர் ஆங் சான் சூகி மற்றும் சிவில் சமூக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடபட்டு வருவதால் மியான்மரில் தொடர்ந் பதட்ட நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.