நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளே நேற்று வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை கடத்திச் சென்றதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து லொறிகளில் மாணவிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட ஜங்கேபே கிராமத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மாணவிகளை மீட்பதற்கான பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளன.
நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டனர்.
நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதுடன், பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளையும் கடத்தி சென்று அவர்களை தமது படையணியில் தீவிரவாதிகள் இணைக்கும் சட்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.