மியான்மரின் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சியின்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல்முறையாக இன்று திங்கட்கிழமை வீடியோ தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் தோன்றினார்.
இன்று நீதிமன்றில் ஆங் சான் சூகி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக இராணுவத்தினரால் புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வீடியோ தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தோன்றியது. பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி அடையாளப்படுத்தப்படாத இடமொன்றில் இராணுவ ஆட்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இராணுவ ஆட்சியை எதிர்த்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 25 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மியான்மர் முழுவதும் பதட்ட நிலை நீடித்து வருகிறது.
ஜனாநாயக ஆட்சியை மீண்டும் அமுல் செய்ய வலியுறுத்தி இன்று திங்கட்கிழமையும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங் சான் சூகி மற்றும் அவரது , ஜனநாயக தேசிய லீக் கட்சியைச் சோ்ந்த தலைவர்களை உடன் விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.