அமெரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் இது மற்றொரு பாரிய அச்சுறுத்தலாக மாறி வருவதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைவர் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான சமீபத்திய தரவுகள் குறித்து தான் கவலையடைவதாகவும் அவா் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் அமெரிக்கா முழுவதும் தினசரி தொற்று நோயாளர் தொகை 70 ஆயிரம் என்ற அளவில் பதிவானது. இதே காலகட்டத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2,000 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்நிலையில் நாங்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து இறுக்கமாகப் பேண வேண்டும். கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் வேகமாகப் பரவுகின்றன. இதனால் கடின உழைப்பால் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தொற்று நோய் நெருக்கடி மீண்டும் தீவிரமாகலாம் எனவும் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி தெரிவித்தார். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகத் தொற்றக் கூடியவையாக உள்ளன. இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிக வேகமாகப் பரவக் கூடிய பி.1.1.7 ரக பிறழ்வு கொரோனா வைரஸ் இந்த மாதத்தில் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைவர் கணித்துள்ளார். எனினும் தொற்று நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் திறன் அமெரிக்கர்களிடம் உள்ளது. அதற்கான பணியை வலுவாகச் செய்யுங்கள் எனவும் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா