இரண தீவு விவகாரம் தொடர்பில் அரசின் தீர்மானம் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாதொன்றாகும். இவ்வாறு தமிழர் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது;;;;
இரணதீவுப் பகுதியை நான் நன்கு அறிவேன். தற்போது தான் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அங்கு ஆரம்பித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பிற்கு அதிகளவு முகம் கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தவர்கள் இரணதீவு மக்களே!
இந்த நிலையில் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் நிலைமையே இந்த நடவடிக்கையாகும். இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லீம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும்.
அவசரமாக எடுத்த இந்த முடிவு நாட்டின் இனங்களுக்கான விரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்துவிடும். இரணதீவு கடல் சூழ்ந்த பகுதி என்பதால், மழைக்காலங்களில் உடல்கள் மேலும் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு இந்த முடிவை எடுத்திருந்தால், இந்த தீர்மானம் முற்றிலுமாக அதற்கு முரண்பாடாகவே தோன்றுகின்றது.
மேலும் அம் மக்கள் நிலத்தடி நீரையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே அரசு இவ்விடயத்தில் முஸ்லீம் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து இரணதீவை தவிர்த்து பொருத்தமான வேறொரு இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி