சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரீ-20 போட்டியில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் 6 ஆறு ஓட்டங்களை விளாசிய பொலார்ட்டின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மே.இந்தியத் தீவுகள் அணி.
மூன்று ரீ-20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்திருந்தது.
இலங்கை அணி தடுமாற்றம்!
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது.
20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அதிகபட்சமாக நிசங்க 39 ஓட்டங்களையும், டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
132 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிம்மோன்ஸ்-லீவிஸ் இணை சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இருவரும் முறையே 26, 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
அகில தனஞ்செய ஹட்ரிக் சாதனை!
ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 3 ஓவர்களில் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 4ஆவது ஓவரை வீசிய அகில தனஞ்செய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார்.
4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் லீவிஸை ஆட்டமிழக்கச் செய்திருந்த தனஞ்செய அடுத்தடுத்த இரு பந்துகளிலும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் மற்றும் நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரையும் தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
அகில தனஞ்செயவின் சுழல் ஹட்ரிக் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி திடீர் சரிவை சந்தித்த நிலையில் அதிரடி ஆட்டக்காரர் பொலார்ட் மற்றும் ஹோல்டர் அடுத்து களமிறங்கியிருந்தனர்.
பொலார்ட் அதிரடி!
இந்த நிலையில் போட்டியின் 6ஆவது ஓவரை வீசிய ஹட்ரிக் சாதனை அகிலவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் பொலார்ட்.
அகில தனஞ்செய வீசிய ஆறு பந்துகளையும் எல்லைக் கோட்டுக்கு வெளியே விளாசி ஆறு பந்துகளிலும் 6 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார் பொலார்ட்.
11 பந்துகளை மட்டும் சந்தித பொலார்ட் 38 ஓட்டங்களைப் பெற்று டீசில்வாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில் 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
பந்துவீச்சில் அகில தனஞ்செய மற்றும் டீ சில்வா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பொலார்ட் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என்ற அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை