கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்களை இரணைதீவில் புதைக்கும் அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலவேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும்நிலையில் இரணை தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான விசேட வழிகாட்டல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கொவிட்19 மரணங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள், கொவிட்19 தொற்றால் மரணிக்கும் சரீரங்களை இரணைத்தீவு நோக்கி கொண்டு செல்லும் வரை செல்லுப்படியாகும்.
சரீரங்களை கொண்டு செல்வதற்கான சவப்பெட்டியை உறவினர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சரீரங்களை எடுத்து செல்லும் போது படம் பிடிக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் பெயரிடப்பட்டுள்ள இடத்திற்கு கொவிட்19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரங்கள் கொண்டு செல்லப்பட்டு நாளாந்தம் அதிகாலை 5.30 மணிக்கு நாச்சிகுடா இறங்குதுரை வரை சரீரங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
கொவிட்19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரத்தை அடையாளங்காண்பதற்காக வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் உறவினர்களில் இரண்டு பேருக்கு மாத்திரமே இரணைதீவிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.
குறித்த உறவினர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.
அத்துடன் சுகாதார பணிக்குழாமினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
எந்தவொரு காரணத்திற்காகவும் சரீரம் அடங்கிய சவப்பெட்டியை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இறுதி சடங்குகளை 2 உறவினர்களால் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி