முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் காதர் மஸ்தான் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இந்நடப்பு ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் நெறிப்படுத்தலோடு நேற்று (04.03.2021) இடம்பெற்றது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்களுக்கு நலன் பேணும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் மூலம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும், சென்ற கூட்டங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் துறை ரீதியிலான வேலைத் திட்டங்களாக விவசாயம், சுகாதாரம், நன்னீர் மீன்பிடி (NAQDA), கமநல அபிவிருத்தித் திணைக்களம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி (RDA),(RDD) , உள்ளூராட்சி மன்றங்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ( NHDA), போக்குவரத்து, மின்சாரம், நீர் விநியோகம், வனவள திணைக்களம், கனியவளம், வன ஜீவராசிகள், இலங்கை மரக்கூட்டுத்தாபனம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் நீண்ட நேர கலந்துரையாடலில் காணி சம்பந்தமாக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன் சமூக மட்ட அமைப்புக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மேலான கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகரதலிங்கம், குலசிங்கம் திலீபன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு