Friday 19th of April 2024 09:30:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
பெரும்பாலான கனேடியர்களுக்கு  கோடைக்குள் கோவிட்19 தடுப்பூசி!

பெரும்பாலான கனேடியர்களுக்கு கோடைக்குள் கோவிட்19 தடுப்பூசி!


எதிர்வரும் கோடை காலத்துக்குள் பெரும்பாலான கனேடியர்கள் கோவிட்19 தடுப்பூசியின் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக கனேடிய தொற்று நோயியல் நிபுணரும் ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட் -19 தடுப்பூசி பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாவனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், ஒப்பந்தத்தின் பிரகாரம் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் தடையின்றிக் கிடைக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது. இவற்றுடன் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிக்கான அங்கீகாரமும் கூடிய விரைவில் கிடைக்கவுள்ளது.

இந்நிலையில் கனடாவில் தடுப்பூசித் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் எனவும் டாக்டர் ஐசக் போகோச் குறி்ப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பெற விரும்பும் அனைத்து கனேடியர்களும் செப்டம்பர் இறுதிக்குள் குறைந்தது ஒற்றைத் தடுப்பூசியைப் பெற முடியும் என கனேடிய மத்திய அரசு முன்னர் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

கனடாவுக்கான தடுப்பூசி வருகையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மந்த நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தடுப்பூசித் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது அதிக தடுப்பூசிகள் கனடா வரத் தொடங்குகின்றன. இதனால் தடுப்பூசித் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் என போகோச் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி வருகை மேலும் அதிகரிக்கும். அத்துடன், தடுப்பூசி மையங்களும் அதிகரிக்கப்படும் எனவும் அவா் கூறினார்.

இதேவேளை, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 784,828 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாகாணத்தின் 14 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 268,118 பேர் மட்டுமே இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த நான்கு வாரங்களில் ஒன்ராறியோ சுமார் 700,000 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது. மாகாணத்துக்கான மொடர்னா தடுப்பூசி ஒதுக்கீடுகள் குறித்த தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் மார்ச் மாதத்தில் கனடாவுக்கு 1.3 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதாக மொடர்னா உறுதியளித்துள்ளது. இதில் கணிசமான அளவு தொகை ஒன்ராறியோவுக்கு கிடைக்கும்.

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராசெனெகா -கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி நேற்று கனடாவுக்கு வந்தது. இதேவேளை, முதல் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 3 முதல் 4 மாத இடைவெளிக்கும் இரண்டாவது தடுப்பூசி போடலாம் என கனேடிய சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிகமானவர்களுக்கு விரைவாக ஒரு தடுப்பூசியை போட முடியும் எனவும் கனேடிய தொற்று நோயியல் நிபுணரும் ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட் -19 தடுப்பூசி பணிக்குழுவின் உறுப்பினருமானடாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE