துருக்கியில் இராணுவ ஹெலிகப்டர் நேற்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்ய 11 இராணுவத்தினர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிட்லிஸ் மாகாணத்தில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தினர் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயிற்சிக்கு சென்ற அந்த ஹெலிகப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் தர இராணுவ அதிகாரி உட்பட 13 இராணுவத்தினர் இருந்தனர். ஹெலிகப்டர் பிட்லிஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுபாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதன் பின் நடத்திய தேடுதல் வேட்டையில் பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள பனிமலை பிரதேசத்தில் ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி விழுந்துள்ளமை தெரிய வந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெலிகப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் எர்பாஸ் உட்பட 9 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துருக்கி ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நாட்டின் தென்-கிழக்கு பகுதியில் மூடு பனி காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.