கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டார்.
அத்துடன், நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்று இரவு ஆயுததாரிகளால் குறைந்தது ஏழு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவர் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் பலியான மருத்துவர் மாகாணத்தில் உள்ள மகப்பேற்று மருத்துவமனைக்கு கடமைக்கு சென்றுகொண்டிருந்தார். இந்தக் குண்டுவெடிப்பில் குழந்தை ஒன்றும் காயமடைந்தது எனவும் அவா் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆயுதாரிகளில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் 7 பேரும் சோர்க் ராட் மாவட்டத்தில் உள்ள ஒரு பிளாஸ்டர் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என நங்கர்ஹார் மாகாண பொலிஸ் தலைமை அதிகாரி ஜுமா குல் ஹேமத் தெரிவித்தார்.
இந்தக் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.
கொல்லப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என மாகாண பொலிஸ் தலைமை அதிகாரியின் செய்தித் தொடர்பாளர் ஃபரித் கான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எல். ஆயுதக் குழுக்கள் ஷியாக்களுக்கு எதிரான போரை அறிவித்து தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த மூன்று பெண் ஊடக பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதக் குழு பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.