அமெரிக்காவில் குழந்தைகள் பிறப்பு வீதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.
2019-ஆம் ஆண்டின் பிறப்பு விகிதம் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைவாகப் பதிவான நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டிலும் பிறப்பு வீதம் பெரும் சரிவைத் சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிலும் குழந்தைகள் பிறப்பு குறையும் சாத்தியமே உள்ளதாகவும் அமெரிக்காவின் புரூகிங்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் நெருக்கடியை அடுத்து பெருமளவு பாடசாலைகள் மற்றும் குழந்தைககள் பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏனைய வேலைகளுடன் குழந்தை பராமரிப்பு, குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது போன்ற கடமைகள் பெண்கள் மீது விழுந்துள்ளன.
இதனால் பல தம்பதியர் கருத்தரிப்பதை தள்ளிப் போடுவதாகவும் தொற்று நோய் நெருக்கடியால் ஏற்படும் அதிக செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைவாகவே குழந்தை பெற விரும்புவதாகவும் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தொழில் சந்தை பலவீனமாக இருக்கும்போது பிறப்புவிகிதம் குறையும். தொழில் சந்தையில் ஏற்றம் இருக்கும்போது பிறப்பு விகிதமும் அதிகரிக்கும் என புரூகிங்ஸ் நிறுவனத்தில் ஆய்வுக்கட்டுரையை எழுதிய மெலிசா கியர்னே, பிலிப் லெவைன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் 32 மாகாணங்களில் பதிவான வருடாந்த பிறப்புத் தரவுகளின் பிரகாரம் 2019-ஆம் ஆண்டை விட 2020-ஆம் ஆண்டில் நாட்டில் 95 ஆயிரம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளன. பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பிறப்பு விகிதம் குறைந்துவரும் நிலையில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் விசேட சலுகைகளை அறிவிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.