ஈராக்கிற்கான நான்கு நாட்கள் பயணமாக போப் பிரான்சிஸ் இன்று வெள்ளிக்கிழமை ரோம் நகரில் இருந்து புறப்பட்டார். கடந்த 2012 -ஆம் ஆண்டில் போப்பாண்டவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் இதுவாகும். அத்துடன் ஈராக்கிற்கான அவரது முதல் பயணமும் இதுவாகும்.
போப் பிரான்சிஸ் அவரது பரிவாரங்கள், பாதுகாப்பு விவகாரக் குழுவினர் மற்றும் 75 பத்திரிகையாளர்களுடன் ஒரு விமானம் ரோமின் லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்திலிருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு இன்று புறப்பட்டது.
ஈராக்கில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற அடுத்தடுத்த ரொக்கட் தாக்குதல்களுக்கு மத்தியில் உலக கத்தோலிக்க மத தலைவரின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினரை ஈராக் ஈடுபடுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளத்தை இலக்குவைத்து கிளர்ச்சிக் குழுக்கள் அடுத்தடுத்து 10 ரொக்கட்களை வீசித் தாக்குதல் நடத்தின. எனினும் இந்தக் தாக்குதலுக்கு பின்னரும் தனது ஈராக் விஜயத்தில் போப் பிரான்சிஸ் உறுதியாக இருந்தார்.
84 வயதான போப் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முன்னாள் கோட்டையான மொசூல் உட்பட நான்கு நகரங்களுக்கு செல்லவுள்ளார். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களால் போற்றப்படும் தீர்க்கதரிசி ஆபிரகாமின் பிறப்பிடமான உர் (Ur) நகரை பிரான்சிஸ் பார்வையிடுவார்.
மேலும் 90 வயதான ஈராக்கின் உயர்மட்ட ஷியைட் முஸ்லிம் மதகுருவான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியை அவர் சந்திப்பார்.
இதேவேளை, இது போப் பிரான்சிஸின் இத்தாலிக்கு வெளியோயான 33 ஆவது பயணமாக அமைகிறது. இன்று ஈராக் வரும் அவர் திங்கட்கிழமை காலை மீண்டும் ரோம் திரும்பவுள்ளார்.