பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர், புற்று நோயாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புற்றுநோய் தடுப்பு பிரிவு மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2ஆம் திகதி பதுளை பொது வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் அடையாளம் காணகப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவ்வாறு 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட 31 பேரில் வைத்தியர் ஒருவரும், அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்று நோயாளிகள் 20 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நோயாளர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டுப் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் புற்று நோய் தடுப்பு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை