இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் அரசு திணறுகின்றது.
சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைக்கமைய கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தினர் விரும்பினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது.
எனினும், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் ஓரணியில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தமிழ் - முஸ்லிம் உறவைப் பிளவுபடுத்தும் அரசின் சதி நடவடிக்கை எனவும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அந்தந்தப் பிரதேசங்களில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர்.
அதேவேளை, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும், தோண்டப்பட்டுள்ள புதைகுழிகளை உடன் மூட வேண்டும் எனவும் வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் தொடர் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடும் எதிர்ப்புக்களையடுத்து உடல்களை அடக்கம் செய்யும் இடத்தைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் அரசு திணறுகின்றது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிடம் ஊடகங்கள் வினவியபோது,
"கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே. எனினும், அங்கு எழுந்துள்ள எதிர்ப்புக்களையடுத்து உடல்களை அடக்கம் செய்யும் இடத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கின்றது. ஆனால், இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதில்லை என்ற முடிவை அரசு இன்னமும் எடுக்கவில்லை. உடல்களை கிழக்கில் அல்லது வேறு இடங்களில் அடக்கம் செய்யலாமா என்று சுகாதார நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர்" - என்று பதிலளித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கொரோனாவால் மரணித்த 10 பேரின் ஜனாஸாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் அடக்கம் செய்வதற்கு அரசால் நேற்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கு நேற்றிரவு வரை 9 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி