ஆப்கானிஸ்தானின் படாக்ஷன் மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ராகிஸ்தான் மாவட்டத்தின் ஜராண்டாப் கிராமத்தில் ஏற்பட்ட இந்தப் பனிச்சரிவில் சிக்கிய மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இப்பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் சிக்கியவர்களுக்கு உதவ முயற்சிகள் நடந்து வருவதாக ஆப்கான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டில் பெப்ரவரி 4-முதல் 6 -ஆம் திகதி வரை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கிராமங்களைத் தாக்கிய தொடர் பனிச்சரிவுகளில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 2015 ஆம் ஆண்டில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவுகளில் குறைந்தது 310 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.