போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது ஈராக் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று கோடிக்கணக்கான ஷியா முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியை புனித நகரமான நஜாப்பில் சந்தித்துப் பேசவுள்ளார்.
கோவிட் -19 தொற்று நோய் நெருக்கடி மற்றும் ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படை தளங்கள் மீது சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல் ஆகிய ஆபத்துக்களில் மத்தியில் போப்பாண்டவர் நேற்று ஈராக்கிற்கு வந்து சோ்ந்தார்.
2003-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பிலிருந்து வன்முறை அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கின் கிறிஸ்தவ சிறுபான்மையினர் எதிர்கொண்டுவரும் பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து 90 வயதான முன்னணி ஷியா மதகுருவுடன் போப் பிரான்சிஸ் இன்று பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஆபிரகாம் நபி பிறந்த இடமாக நம்பப்படும் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தின் மையமான உர் எனப்படும் பண்டைய நகருக்கு போப்பாண்டவர் செல்லவுள்ளார்.
இதேவேளை போப்பாண்டவரின் ஈராக் பயணத்தை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 10,000 ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அங்கு சுழற்சி முறையில் ஊரடங்கு உத்தரவும் அமுலில் உள்ளது.
இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய போப்பாண்டவரை ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி வரவேற்றார்.
விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போப் பிரான்சிஸ், வன்முறை, தீவிரவாதம், பிளவுகள் மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தார்.
போர்க்களால் ஈராக் பேரழிவுகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் குறுங்குழுவாதங்களால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன எனவும் தனது உரையில் போப்பாண்டவர் தெரிவித்தார்.