ஈராக் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று இஸ்லாமியர்களின் ஷியா பிரிவு முக்கிய தலைவர்களில் ஒருவரான அயதுல்லா அலி அல்-சிஸ்தானியை புனித நகரமான நஜாப்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
இதன்போது ஈராக்கில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து போப்பாண்டவர் பேசினார். இரு மதத் தலைவர்களுக்கு மத்தியில் நடந்த பேச்சு வார்த்தை சுமாராக 50 நிமிடம் நீடித்தது.
போப் பிரான்சிஸ் உடனான இன்றைய சந்திப்பு அமைதியை வலியுறுத்துவதாக இருந்தது என உலகில் வாழும் இலட்சக்கணக்கான ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் ஆன்மிகத் தலைவரான 90 வயதான அயதுல்லா அலி அல்-சிஸ்தானி இச்சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டார்.
நஜாப் நகரத்திலுள்ள தன் வீட்டில் போப்பாண்டவரை வரவேற்று ஆயதுல்லா அலி உபசரித்தார்.
கொரோனா பெருந்தொற்று நோய் நெருக்கடிக்குக் பின்னர் போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முதல் சர்வதேசப் பயணம் இதுவாகும். அத்துடன், ஈராக்கிற்கான அவரது முதல் பயணமும் இதுவே.
2003-ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக் மீது போர் தொடுத்த பின்னர் அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கிறிஸ்தவர்களின் பல வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈராக் மக்களைப் போல அமைதியாகவும், பாதுகாப்பாகவும், முழு அரசியலமைப்பு உரிமைகளோடு இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் வாழ்வதற்கான உரிமை நிலைநாட்டப்படும் என இன்று தன்னைச் சந்தித்த போப்பாண்டவரிடம் அயதுல்லா அலி அல்-சிஸ்தானி உறுதியளித்துள்ளார்.