ஐரோப்பிய நாடுகளில் கோவிட்19 புதிய பிறழ்வு வைரஸ்கள் வேகமாகப் பரவி வருவதால் அந்நாடுகள் மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
இத்தாலியின் முன்னைய தீவிர தொற்று மையங்களில் ஒன்றான மிலன் புறநகர்ப் பகுதியான பொல்லேட்டில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலை மற்றும் அருகிலுள்ள இடைநிலைப் பாடசாலை ஆகியவற்றில் இருந்து புதிய வகை பிறழ்வு கொரோனா வைரஸ் மிக வேகத்துடன் பரவிவருகிறது.
மிலன் நகரில் கடந்த சில நாள்களில் மட்டும் 45 மாணவா்களுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 14 பணியாளர்களுக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்கள் வேகமாகப் பரவி வரும் புதுவகை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, புலாட் நகரிலும் புதுவகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எனினும் நம்மை விட புத்திசாலித்தனமாக அந்த வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டு வேகமாகப் பரவி வருகிறது என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் முதல்முதலாக் கண்டறியப்பட்ட அதிவேகமாகப் பரவும் கொரானாவால் மட்டுமன்றி, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேஸிலில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகின்றன.
இந்நிலையில் புதுவகை கொரோனா வைரஸ்களால் தொற்று பரவல் தீவிமடைந்து வருகிறது. அத்துடன், பொது முடக்கங்களைத் தளா்த்துவதும் அந்த நோய் பரவலை அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹன்ஸ் குளூக் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை வரையான தரவுகளின்கடி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 3 கோடி 49 இலட்சத்து 18 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 8 இலட்சத்து 32 ஆயிரத்து 210 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 2 கோடி 45 இலட்சம் போ் குணமடைந்துள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)