கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள – லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 7 வாரங்களேயான குழந்தை இன்று உயிரிழந்தது.
வெலிமடை பகுதியைச் சோ்ந்த இந்தக் குழந்தை உடல் நலக் குறைவு காரணமாக ஆரம்பத்தில் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குழந்தை பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இக்குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் இன்று குழந்தை உயிரிழந்ததாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் பி. விஜேசூரிய இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் குழந்தை ஆபத்தான நிலையில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது எனவும் அவா் குறிப்பிட்டார்.
குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தாய்க்கும் கொரேனா தொற்று உறுதியானது. குழந்தையின் தந்தை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இந்தக் குழந்தை பிறக்கும்போதே இதய கோளாறுகள் இருந்ததாகவும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் பி. விஜேசூரிய கூறினார்.
இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கோவிட் வழிகாட்டல்களின் பிரகாரம் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை