யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தினை கொரோனா மரணம் என்று தற்போது முடிவு செய்யமுடியாது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய பெண் இன்று உயிரிழந்த நிலையில் அவர் கொரோனா மூலம் தானே உயிரிழந்தார்? என்று எமது செய்தியாளர் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனை அடுத்து அவர் நொச்சியாகம கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கோப்பாய் கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
நொச்சியாகமவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணினைப் பராமரிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் குடும்பத்தார் அனுமதிக்கப்பட்டிருந்த கோப்பாய் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டே அவர் நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவருடைய மரணம் கொரோனா மரணம் என்று உடனடியாகக் கொள்ளமுடியாது.
இது குறித்து மத்திய சுகாதார நிலையத்திற்கு தெரிவித்து அவர்களின் முடிவின் அடிப்படையிலேயே குறித்த மரணத்தை கொரோனா மரணமாக ஏற்றுக்கொள்வதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார். நொச்சியாகம
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை