முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகங்களை மறைக்கும் ஆடைகளை அணிய சுவிட்சர்லாந்தில் தடை அமுக்கு வருகிறது. முகங்களை மூடும் ஆடைகளை அணிய தடை விதிப்பது தொடர்பில் மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் தடைக்கு ஆதரவாக 51.2% பேர் வாக்களித்துள்ளனர். எதிராக 48.8% பேர் வாக்களித்துள்ளனர். முகங்களை மறைக்கும் ஆடைகளை அணிவது தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்புக்கான திட்டத்தை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்வைத்தது.
தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற கோஷத்துடன் இதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகங்களை மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கும் தீா்மானம் நடைமுறைக்கு வரும் நான் இருண்ட நாளாகும் என முன்னணி சுவிஸ் இஸ்லாமிய குழுக்கள் தெரிவித்துள்ளன.
இது சட்ட சமத்துவமின்மைக் கொள்கையை மேலும் ஆழமாக்குகிறது. மேலும் முஸ்லிம் சிறுபான்மையினரை ஒதுக்கிவைக்கும் தெளிவான சமிக்ஞையை வெளிப்படுத்துகிறது என சுவிஸ் முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் ஆணையிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் இந்தத் தடைக்கு எதிராக வாதிட்டது.
லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி சுவிட்சர்லாந்தில் யாரும் புர்கா அணிவதில்லை. சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணியிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 5% முஸ்லிம்களாவர். இவா்களில் பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.