கினியா நாட்டில் உள்ள இராணுவ தளத்தில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் 31 பேர் கொல்லப்பட்டனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக கினியா சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன. கினியாவின் - பேட்டா துறைமுக நகரத்தில் உள்ள இராணுவ தளத்தில் டைனமைட் வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்தன. இந்தக் குண்டு வெடிப்பால் பேட்டா துறைமுகப் பகுதிகள் அதிர்ந்தன. இந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கி விழுந்ததுடன், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. அத்துடன் பல கிலோ மீற்றர் தூரத்துக்கு வானுயர கரும் புகை எழுந்தது.
டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொள்ளாமையே இந்த விபத்துக்குக் காரணம் என கினியா டியோடோரா ஓபியாங் தெரிவித்துள்ளார்.