"இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
'இலங்கையில் போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட்டதே இல்லை. இராணுவத் தளபதி என்ற ரீதியில் எனது மனச்சாட்சியின் பிரகாரம் இதை சர்வதேசத்துக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன்' என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும்.
இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தது தொடக்கம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களும் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால், அரசுதான் ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.
இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன்