லண்டனில் இடம்பெற்றுவரும் ஈழத் தமிழ்-பிரித்தானிய பெண் அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டேவிட் ஷூப்ரிட்ஜ் உள்ளிட்ட அவுஸ்திரேலிய எம்.பிக்கள் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாண செனட்டர் மெஹ்ரீன் ஃபாரூகி ஆகியோர் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
எந்தவொரு அரசாங்கமும் மனித உரிமைகளை உறுதி செய்யும் தங்களது சுயாதீன நடவடிக்கைகளை உறுதி செய்ய அஞ்சக்கூடாது. அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமார் உடல்நிலை குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷூப்ரிட்ஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு எனது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறேன் என நியூசவுத்வேல்ஸ் மாகாண செனட்டர் மெஹ்ரீன் ஃபாரூகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை தொடர்ந்துவரும் நிலையில் 2009 இனப்படுகொலை இடம்பெற்று 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்கள் நீதி கோரி போராடிவருகின்றனர்.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரிந்துரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டிஷ்-தமிழ் பெண் திருமதி அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகங்கள் மற்றும் அமைப்புகள் இதுபற்றி கரிசனை கொண்டுள்ளன எனவும் செனட்டர் மெஹ்ரீன் ஃபாரூகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா