கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்த இரு வேறு இடங்களில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
பாரதிபுரம் மாகாவித்தியாலயம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களிலேயே இவ்வாறு அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வு பணிக்காக அனுமதிபெறப்பட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது கெிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலரும் அங்கு வருகை தந்திருந்தனர்.
குறித்த இரு அகழ்வு பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் பணித்ததற்கமைவாக கைவிடப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறு அகழ்வு பணிகள் இடம்பெற்ற வந்த நிலையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி