வீதி பாதுகாப்பு நலநிதிய உலக ரீ-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி கிண்ணத்தை தனதாக்கியது.
இந்தியாவின் ராய்பூர் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய ஜாம்பவான்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய ஜாம்பவான்கள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.இந்திய ஜாம்பவான்கள் அணி சார்பில், யூசுப் பதான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும், சச்சின் டென்டுல்கார் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர். 182 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஜாம்பவான்கள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணி தரப்பில் சனத் ஜெயசூரிய 43 ஓட்டங்களையும், ஜெயசிங்க 40 ஓட்டங்களையும், வீரரத்னே 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
இறுதி வரை பரபரப்பாக நடந்து முடிந்த போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது இந்திய ஜாம்பவான்கள் அணி.
போட்டியின் ஆட்டநாயகனாக யூசுப் பதான் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகனாக இலங்கை ஜாம்பவான்கள் அணியைச் சேர்ந்த திலகரட்ன டில்சானும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை