அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணத்தின் ஓரேஞ்ச் நகரிலுள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறு குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இம்பெற்ற இந்தப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரேஞ்ச் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது அங்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் இறந்து கிடந்தனர் . தற்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் உள்ள ஒரஞ்ச் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்குள் பொதுமக்களை இலக்கு வைத்து இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.
மார்ச் 16 அன்று அட்லாண்டா பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவரால் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மார்ச் 22 அன்று கொலராடோவின் போல்டரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.