நடிகர் ரஜனிகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந் தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ருவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.
70 வயதாகும் ரஜினிகாந்தின் கலைச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் ஏற்கனவே பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் ரஜனிகாந்துக்கு மற்றொரு உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தாமதம் என்றாலும் இது வரவேற்புக்குரியது. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் எனவும் ஸடாலின் குறிப்பிட்டுள்ளார்.
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.