ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் மிக வேகமாக அதிகரித்துவரும் கோவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மற்றொரு 4 வார கால சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னரைப் போன்று முழுமையாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (emergency brake) இந்த புதிய முடக்க நிலை அமையும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மாகாணம் முழுவதுமான சமூக முடக்கல் நிலை அமுலுக்கு வரும் என ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
புதிய சமூக முடக்கல் அறிவித்தலில் பிரகாரம் உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவைகள் தடை செய்யப்படும். அத்துடன், ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக அமுலாகும். மாகாணத்தில் 34 பொது சுகாதார பிராந்தியங்களிலும் நான்கு வார காலத்திற்கு முடக்க நிலை அமுலில் இருக்கும் என முதல்வர் டக் போர்ட் கூறினார்.
நாங்கள் இப்போது தொற்று நோயின் மூன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளோம். கவலைக்குரிய புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் வகைகள் வேகமாகப் பரவுகின்றன. நாங்கள் இப்போது கண்ணுக்குத் தெரியாத ஆபத்தான புதிய எதிரியுடன் போராடுகிறோம் என முதல்வர் டக் போர்ட் நேற்று முடக்க அறிவிப்பை வெளியிட்டு கருத்து வெளியிடும்போது கூறினார்.
புதிய முடக்க நடைமுறையின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் கடுமையான திறன் வரம்புகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சில்லறை கடைகள் 50 சதவீத திறன் வரம்பில் இயங்க முடியும், அதே நேரத்தில் பிற கடைகள் மற்றும் சில்லறை வியாபார நடவடிக்கைகள் 25 சதவீத திறனுடன் செயல்பட முடியும். தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் ஜிம்கள் மூடப்படும்.
ஒன்ராரியோ மக்கள் யாரும் தங்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் ஒன்றுகூடுவது கட்டுப்படுத்தப்படும். வெளியே 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை வருகிறது. 5 பேருக்கு குறைவானவர்கள் அவசிய தேவை கருதி ஒன்றுகூடினால் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அத்தியாவசிய தேவை தவிர, அநாவசியமான பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஒன்ராறியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து வாங்குதல் மருத்துவ ஆலேசானை பெறுதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக ஆதரவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே வீட்டுக்கு வெளியே பயணம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
வீட்டில் தங்குவதற்கான கடும் உத்தரவை நாங்கள் அறிவிக்கவில்லை. ஏனெனில் இது சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடையே கடந்த காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.
புதிய சமூக முடக்க அறிவித்தலின் கீழ் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. முழுமையாக சமூக முடக்க நிலைக்குப் பதிலாக அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையே நாங்கள் அறிவித்துள்ளோம் எனவும் எலியட் கூறினார்.
இதேவேளை, மாகாணத்தில் தொடர்ந்தும் ரொரண்டோ, பீல் பிராந்தியங்களில் அதிகளவு தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை, மாகாணத்தில் ரொரண்டோவில் 743, பீல் பிராந்தியத்தில் 484 மற்றும் யோர்க் பிராந்தியத்தில் 311 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ