தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாளைய தினத்துடன் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறுவதையிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு இன்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கடந்த நாடக்ளில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது உடலில் திடீர் சோர்வு நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இருமல் அதிகம் காணப்பட்டது. இதனால் நேற்று அவர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருந்தார்.
சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வார் என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.
கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தேர்தல் பிரசாரத்தில் உடன் சென்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை