மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆயரின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மாலை 3 மணியளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியூடாக புகழுடல் கொண்டு செல்லப்பட்டது. ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலை சந்தியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியை குறித்த ஊர்வலம் சென்றடைந்தது.
அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்தது. அங்கிருந்து மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய வீதியூடாக டெலிகொம் சந்தியை சென்றடைந்தது.
அங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள் மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 02 மணி வரை அஞ்சலி நடைபெற்று மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களின் ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் புகழுடல் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் கறுப்பு,வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் மன்னார் மறைமாவட்டம் சோக மயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்