இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் ஒரு இலட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 8 மணி வரையான 24 மணி நேரங்களில் நாடு முழுவதும் புதிதாக ஒரு இலட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று நோயின் ஆரம்பம் முதல் இந்தியாவில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்று நோயாளர் தொகை இதுவாகும். கடந்த செப்டம்பர் 17-ஆம் திகதி 97,894 தொற்று நோயாளர்கள் பதிவனதே இதுவரை இந்தியாவில் பதிவான ஒருநாள் அதிக பட்ச தொற்று நோயாளர் தொகையாக இருந்தது.
கடந்த 24 மணி நேரங்களில் பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் இதுவரை நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 25 இலட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது.
இவா்களில் 1 கோடியே 16 இலட்சத்து 82 ஆயிரத்து 136 பேர் தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 7 இலட்சத்து 41 ஆயிரத்து 830- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் 478- பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இவா்களுடன் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 101- ஆக அதிகரித்துள்ளது
இந்நிலையில் இந்தியாவில் கோவிட்19 தடுப்பூசி போடும் பணிகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நாடெங்கும் 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163 பேருக்கு கோவிட்19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா