மியான்மாரில் தினசரி பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து மியான்மார் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை என தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்ற மியான்மர் பெண் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த வாரம் தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஹான் லே என்கிற மியான்மர் அழகி தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.
அத்துடன் மியான்மரில் நடக்கும் இராணுவ அராஜகம் குறித்தும் அவா் வெளியிட்டுள்ள கருத்து சா்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மியான்மரில் வீதியில் இறங்கி இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் இவா் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் கடந்த பெப்ரவரி-01 இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இதுவரை அங்கு 43 சிறுவர்கள் உட்பட 500-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே அழகிப் போட்டியில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக சா்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தான் தீர்மானித்ததாக ஹான் லே தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சை அடுத்து மீண்டும் மியான்மருக்கு அவா் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மியான்மருக்கு திரும்பினால் தனக்கு ஆபத்து ஏற்படும் என் அச்சம் வெளியிட்டுள்ள அவா், அடுத்த மூன்று மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார். எனினும் வரப்போகும் ஆபத்தை உணர்ந்தே தான் பேசியதாகவும் ஹான் லே கூறியுள்ளார்.
இதேவேளை, மியான்மரில் உள்ள தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அவா் கவலை வெளியிட்டுள்ளார். எனது குடும்பம் இதுவரை பாதுகாப்பாக இருக்கிறது. மியான்மரில் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் அவர்களோடு தொடர்பு கொள்வது சிரமமாக இருக்கிறது எனவும் ஹான் லே தெரிவித்துள்ளார்.