ஒன்ராறியோவில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவை (stay-at-home order) பிறப்பிக்கலாமா? என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்திய மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது குறித்து அமைச்சரவை கூடி ஆராய்ந்துள்ளது.
ஒன்ராறியோவில் தொற்று நோய் மூன்றாவது அலை தீவிரமடைந்து வரும் கடந்த சனிக்கிழமை முதல் அங்கு ஒரு மாத கால கோவிட்19 முடக்க நிலை அமுலுக்கு வந்துள்ளது.
எனினும் முன்னரைப் போன்று முழுமையாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (emergency brake) இந்த புதிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிட்டப்பட்டால் மட்டுமே மாகாணத்தில் அதிகரித்துவரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, வீ்ட்டில் தங்கியிருக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ரொரண்டோவின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா, பீல் பிராந்தியத்தின் சுகாதார அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ மற்றும் ஒட்டாவாவின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் வேரா எட்சஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை வலியுறுத்தி மாகாண தலைமை சுகாதார அதிகாரி டேவிட் வில்லியம்ஸுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையிலேயே இது குறித்து மாகாண அரசாங்கம் நேற்றுக் கூடி ஆராய்ந்துள்ளது.
இதற்கிடையில் மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் நேற்று செவ்வாய்க்கிழமை சூசகமாகக் கூறினார்.
எனவே, வீட்டில் தங்கும் உத்தரவை மாகாண அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவு மாகாணம் முழுமைக்கும் அறிவிக்கப்படுமா? அல்லது பிராந்திய ரீதியில் நடைமுறைக்கு வருமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஒன்ராறியோவில் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட சமூக முடக்கல் அறிவித்தலில் பிரகாரம் மாகாணத்தில் 34 பொது சுகாதார பிராந்தியங்களிலும் உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக அமுலாகியுள்ளன.
புதிய முடக்க நடைமுறையின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் கடுமையான திறன் வரம்புகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சில்லறை கடைகள் 50 சதவீத திறன் வரம்பில் இயங்க முடியும். அதே நேரத்தில் பிற கடைகள் மற்றும் சில்லறை வியாபார நடவடிக்கைகள் 25 சதவீத திறனுடன் செயல்பட முடியும். தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டுள்ளன.
ஒன்ராரியோ மக்கள் 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு குறைவானவர்கள் அவசிய தேவை கருதி ஒன்றுகூடினால் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அத்தியாவசிய தேவை தவிர, அநாவசியமான பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஒன்ராறியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து வாங்குதல் மருத்துவ ஆலேசானை பெறுதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக ஆதரவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே வீட்டுக்கு வெளியே பயணம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
புதிய சமூக முடக்க அறிவித்தலின் கீழ் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. முழுமையாக சமூக முடக்க நிலைக்குப் பதிலாக அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ