கனடா - அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட்19 புதிய பிறழ்வு வைரஸ் பரவல் தீவிரமாகிவரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு முதலாம் படி நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் செவ்வாய்கிழமை முதல் நுலகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில்லறை வர்த்தக நிலையங்களின் செயற்பாட்டுத் திறன் 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாண மக்கள் உடற்பயிற்சி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை வீட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், நடன நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் பிரகாரம் வெள்ளிக்கிழமை முதல் உணவகங்கள், மதுபான சாலைகள், கபேக்களில் உட்புற பரிமாற்ற சேவைகள் முழுமையாகத் தடை செய்யப்படும்.
மூடப்பட்ட இடங்களில் கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை அமுலில் இருக்கும். திறந்த வெளிகளில் 10 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து 15 வீத திறன் வரம்புடனேயே செயற்பட முடியும்.
அல்பர்ட்டாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 931 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அவா்களில் 676 பேர் கவலைக்குரிய புதிய பிறழ்வு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாகாணத்தில் நேற்று 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவற்றுடன், அல்பர்ட்டாவில் மொத்த கொரோனா மரணங்கள் 2,001 -ஆக அதிகரித்துள்ளன.
இங்கு கடந்த மார்ச் 31 முதல் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 800-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.
மாகாணத்தில் தற்போது பி.1 மற்றும் பி.117 புதிய பிறழ்வுகள் அதிகமாக உள்ளன. இவை வேகமாகப் பரவக் கூடியவை என மாகாண சுகாதார வைத்திய அதிகாரி தீனா ஹின்ஷா கூறினார்.
தற்போதைய தொற்று நோய் பரிமாற்ற வீதத்தின் அடிப்படையில் ஏப்ரல் இறுதிக்குள் அல்பர்ட்டாவில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 2,000 வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், மருத்துவமனையில் அனுதிக்கப்படும் நோயாளர் தொகை 1,000 வரை அதிகரிக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மே மாத நடுப்பகுதியில் மருத்துவமனைகள் அவற்றின் உச்சபட்ச திறன் வரம்பை அடையக்கூடும் என அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி எச்சரித்துள்ளார்.
இதனைத் தவிர்க்கும் முயற்சியாகவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா