பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 4,195 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் முழுவதும் கொரோனா வைரசின் ஆபத்தான பிறழ்வுகள் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு தொற்று நோயாளர் தொகை தீவிரமாக அதிகரித்து வருகிறது. போதிய மருத்துவ உதவிகள் இன்றி தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
நேற்று பதிவான 4,195 கொரோனா மரணங்களுடன் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 337,000 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகூடிய மரணங்கள் இங்கு பதிவாகியுள்ளன.
தொற்று நோய் மோசமான வகையில் பரவி வருவதுடன், தினசரி ஆயிரக்கணக்கான மரணங்களும் பதிவாகி வருகின்றபோதும் நாட்டை ஒருபோதும் முடக்கப் போவதில்லை என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பு கொரோனா தொற்று நோய் நெருக்கடியை விட மிக மோசமாக இருக்கும் என அவா் வாதிட்டு வருகிறார். அத்துடன், பிராந்திய ரீதியாக அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான முயற்சிகளை அவா் முன்னெடுத்து வருகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் உடல் பருமன், உள நெருக்கடிகளுக்கு பலர் முகம்கொடுத்து வருவதாக கூறினார்.
எனினும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவுக்குப் பலியாவது குறித்து எந்தக் கருத்துக்களையும் அவா் வெளியிடவில்லை.
இதேவேளை, இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பிரேசிலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கோவிட் -19 தொற்றுக்குள்ளான 66,570 பேர் உயரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தரவுகள் தெரிவிக்கின்றன.
நிலைமை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரேசிலில் பெரும்பாலான மாநிலங்களில் 90 வீதமான மருத்துவமனைப் படுக்கைகள் கோவிட் -19 தொற்று நோயாளிகளால் நிறைந்துள்ளன.
மேலும் பல மாநிலங்களில் ஒக்ஸிஜன் மற்றும் மயக்க மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிர வலதுசாரி சிந்தனையாளரான ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, மீண்டும்-மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்தும் அதற்குரிய தடுப்பூசிகள் குறித்தும் சந்தேகம் வெளியிட்டு வருகிறார்.
இதனால் உள்நாட்டில் அவர் கடுமையான விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
2021 அதிகளவு கோவிட்19 தடுப்பூசிகளை போட முடியும் என ஜெய்ர் போல்சனாரோ முன்னர் அறிவித்தபோதும் இதுவரை நாட்டு மக்கள் தொகையில் 8 வீதமானோருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாடு மிக "பயங்கரமான சூழ்நிலையில்" இருப்பதாக பிரேசில் தொற்றுநோயியல் நிபுணர் எத்தேல் மாகீல் எச்சரித்துள்ளார். தொற்று நோயைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஒரே வழி குறைந்தது 20 நாட்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்குவதே எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்