அமெரிக்காவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி எதிர்வரும் 19-ஆம் திகதி முதல் தொடங்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியாக தான் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என பைடன் வாக்குறுதி அளித்தார். எனினும் 58 நாட்களுக்குள்ளேயே இந்த இலக்கை அவா் அடைந்துள்ளார்.
தற்போது நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்குள் 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி அமெரிக்க நகர்ந்து வருவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிட்ட இந்தக் கால எல்லைக்கு 2 வாரங்கள் முன்னதாகவே இந்தத் திட்டம் ஆரம்பமாகுமென பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் ஆபத்தான புதிய திரிவுகள் வேகமாகப் பரவி வருகின்றன. கோடிக்கணக்கானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளபோதும் அங்கு தொடர்ந்து 50 ஆயிரம் பேர் வரை தினசரி தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்19 தடுப்பூசி போட பல மாதங்கள் ஆகும். அதுவரை அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா