யாழ். சந்தை கொத்தணிகளி மேலும் 196 பேர் உள்ளிட்ட 215 பேருக்கு கடந்த 48 மணித்தியாலங்களில், யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். ஆய்வுகூடங்கள், முல்லேரியா மற்றும் கொழும்பு ஆய்வு கூடத்தில் கடந்த இரு தினங்களாக (ஏப்-07-08) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், கடந்த 48 மணித்தியாலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
யாழ். சந்தை கொத்தணியை அடுத்து, திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெற்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டிருந்த 464 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.இதைவிட யாழ். போதனா ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில், நேற்று முன்தினம் 637 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த 29 பேரில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவர்களில் யாழ். நவீன சந்தை கொத்தணியில் இருந்து அடையாளம் காணப்பட்டிருந்த 13 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.
இதன் மூலமாக நேற்று முன்தினம் மட்டும் யாழ். நவீன சந்தை கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தவர்களது எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருந்தது.
இதேவேளை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்றைய தினம் மேலும் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 1003 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 80 பேர் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமத்தின் பாரதிபுரம் என்ற ஊரினைச் சேர்ந்தவர்கள் என்றும், 20 பேர் யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் நேற்று யாழ். போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்