யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதான குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த இரவு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் உறுப்பினர் வ.பார்த்தீபனும், யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு சென்ற இருவரிடமும், குறித்த விடயம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கையிலெடுத்துள்ளனர் என்றும் மேல் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களே கையாள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த இரவு 8.00 மணிமுதல் இன்று அதிகாலை 2.00 மணி வரை வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மேற்குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்படுவதாக வி.மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், தன்னிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் வாகன திறப்பு என்பவற்றை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனிடம் வி.மணிவண்ணன் கையளித்திருந்தார்.
உடனடியாகவே வி.மணிவண்ணனை கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
யாழ். மாநகர காவல் பிரிவு எனும் பெயரில் அமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு குழுவின் ஆடை, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருந்தது, இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண உறுப்படுத்தியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்