ஏழை நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு 25 மடங்கு அதிவேகமாக தடுப்பு மருந்துகள் சென்று சேர்கின்றன என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
உலகின் பின்தங்கிய கண்டமான ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் உள்ளன. இவற்றில் இதுவரை வெறும் மூன்று நாடுகள் மட்டுமே ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளன.
அத்துடன், 20-க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு இன்னும் ஒரு சொட்டு தடுப்பு மருந்து கூட சென்று சேரவில்லை எனவும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் மேற்கொண்ட அந்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது. இது தாமதமாக உள்ளதுடன், போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் உலகின் பணக்கார நாடுகளுக்கு அதிவேகத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏழை நாடுகளுடன் ஒப்பிடுகையில் செல்வந்த நாடுகள் 25 மடங்கு அதிவேகமாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
உலகின் 4.3 சதவீத மக்கள் தொகைகொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவில் உலகில் 24 வீத தடுப்பு மருந்துகள் அதிவேகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தானில் 0.1 வீத தடுப்பு மருந்துகளே விநியோகிக்கப்பட்டுள்ளன.
பணக்கார நாடுகள் அதிக அளவு தடுப்பு மருந்துகளை விலைகொடுத்து வாங்கி விட்டன. இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவில் 75 வீத மக்களுக்கு தடுப்புமருந்து சென்று சேர்ந்துவிடும். அதே சமயத்தில் ஏழை நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேருவதில் தாமதம் ஏற்படுகிறது.
உலகின் 18 வீத மக்கள் தொகையை கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடான சீனாவில் உலக அளவில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 20 வீத தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு விட்டன எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்