உலகில் பல நாடுகளில் முன்னொருபோதும் இல்லாதவாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் உச்சம் பெற்றுள்ள நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அத்துடன், உலகம் முழுவதும் நேற்று மட்டும் 8,659 பேரை கொரோனா வைரஸ் பலியெடுத்தது.
இவற்றுடன், உலகெங்கும் உறுதி செய்யப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 13 கோடியே 72 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அத்துடன், உலகெங்கும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்து 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலையில் மிக மோசமான கொரோனா பாதிப்பை எதிர்கொண்டுவரும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா ஆகியவை உள்ளன. நேற்று உலகம் முழுவதும் கொரோனாவுக்குப் பலியானவர்களில் மூன்றில் ஒருவா் இந்த 5 நாடுகளைச் சோ்ந்தவர்களாவர்.
உலகில் பல நாடுகள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயில் மூன்றாவது அலையுடன் போராடி வருகின்றன. தீவிரமாகும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல நாடுகள் சமூக முடக்கலை அறிவித்துள்ளன.
இதனைவிட தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் தடுப்பூசி பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் கட்டுப்பாடின்றி தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகில் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்று இந்தியாவில் பதிவாகினர். இந்தியாவில் நேற்று 1,69,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 879 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவாக 54,562 பேருக்கு துருக்கியில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், இங்கு நேற்று 243 கொரோனா மரணங்கள் பதிவாகின.
நேற்று அதிக தொற்று நோயாளர்கள் பதிவான நாடுகளின் வரிசையில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு நேற்று 52,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பிரேசிலில் நேற்று 38,866 பேருக்கும் ஈரானில் 23,311 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்று பதிவான நாடுகளின் வரிசையில் இந்நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.
இதேவேளை, உறுதி செய்யப்பட்ட இந்த தொற்று நோயாளர் தொகையை விட உண்மையான தொற்று நோயாளர் தொகை அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் பல நாடுகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கொரோனா வைரஸ் பரிசோதனைகளையே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்