பிரேசிலில் இதுவரை சுமார் 1,300 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் உலகெங்கும் மிக அரிதாகவே பதிவாகிவரும் நிலையில் பிரேசிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் இறந்துள்ளமை குறித்து அதிர்ச்சி வெளியிடப்படுகிறது.
இதுவரை சுமார் 500 குழந்தைகள் மற்றும் 9 வயதிற்கு உட்பட்ட 800-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கோவிட் -19 நோயால் இறந்துவிட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சிறுவர்களின் உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பிரேசிலில் கொரோனா வைரஸ் பரிசோதனை மிகக் குறைவாகவே நடப்பதால் குறைந்தளவு தொற்று நோயாளர்களே உறுதிப்படுத்தப்படுவதாக அவா்கள் தெரிவித்தனர்.
உத்தேச மதீப்பீட்டின் பிரகாரம் 1,302 குழந்தைகள் உட்பட 9 வயதுக்குட்பட்ட 2,060 பேர் பிரேசிலில் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கலாம் என சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் பாத்திமா மரின்ஹோ தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் சிறுவர்கள், குழந்தைகள் இறக்கும் ஆபத்து மிகக் குறைவு என்பது தவறான கருத்து. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் சுவாச நோய் அறிகுறிகளுடன் சிறுவர்கள், குழந்தைகள் உயிரிழந்தமை 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மரணங்கள் கொரோனாவுடன் தொடர்புபட்டவையாக இருக்கலாம் எனவும் அவா் தெரிவித்தார்.
இதேவேளை, பிரேசிலில் கடந்த 24 மணி நேரங்களில் 80,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் அங்கு பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 37 இலட்சத்து 58 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,774 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றுடன், மொத்த கொரோனா மரணங்கள் 3 இலட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.