அமெரிக்க தேர்தல் தலையீடு, இணைய தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதோடு, ரஷ்யாவின் 10 உயர்மட்ட தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொஸ்கோவில் இருந்து 10 அமெரிக்க ராஜதந்திரிகளை வெளியேற்றவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தல் தலையீடு, இணைய தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை வியாழக்கிழமை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
ரஷ்ய அரசாங்க கடனில் அமெரிக்க வங்கிகள் வர்த்தகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை அவா் விதித்தார். உளவாளிகள் எனக் கூறப்படும் 10 தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் உத்தரவிட்ட பைடன், 2020 ஜனாதிபதித் தேர்தலில் தலையிட முயன்றதாகக் கூறப்படும் 32 நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதிப்பதாக அறிவித்தார்.
அமெரிக்காவுக்கு எதிரானா ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமது செயற்பாடுகள் அமையும் என்ற சமிக்ஞை இதன்மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அமெரிக்காவின் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மொஸ்கோவில் இருந்து 10 அமெரிக்க ராஜதந்திரிகளை வெளியேற்றவுள்ளதாக ரஷ்யா நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவு அறிவித்துள்ளது.