உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோயாளர் தொகை மற்றும் கொரோனா மரணங்கள் கவலைக்குரிய விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
உலகளவில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை வாரந்தம் சராசரியாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவா் கூறினார்.
இது தொற்று நோயின் ஆரம்பத்திலிருந்து நாம் இதுவரை கண்டிராத மிக உயர்ந்த சராசரி எனவும் அவா் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி உலகளவில் 138.5 மில்லியன் தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் 2.9 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
முன்னர் கொரோனா தொற்று நோயின் பிடியில் இருந்து விடுபட்டிருந்த சில நாடுகளில் கூட இப்போது தொற்றுநோய் செங்குத்தான அதிகரிப்பை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பப்புவா நியூ கினியா ஒரு எடுத்துக்காட்டு எனவும் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
சுமார் எட்டு மில்லியன் மக்கள்தொகை கொண்ட பசிபிக் தீவான பப்புவா நியூ கினியா இந்த நோயில் இருந்து ஆரம்பத்தில் தப்பியிருந்தது. இந்த ஆண்டின் ஆரம்பம் வரை 900-க்கும் குறைவான தொற்று நோயாளர்களும் 9 கொரோனா மரணங்களும் மட்டுமே இங்கு பதிவாகியிருந்தன.
தற்போது இங்கு 9,300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. அதனை விட அனைவருக்கும் சமமான முறையில் தடுப்பூசிகள் பங்கீடு செய்யப்படுவது அவசியமானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்