இலங்கையில் திருமணமான பெண்களில் 22வீதமானவர்கள் மந்த போசனைக்குள்ளாகியுள்ளதாக கல்லடி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தெரிவித்தார்.
‘வாழ்க்கைக்கான தோட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் நடைபெற்ற முருங்கை மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வில் பங்குபற்றி கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
900 நோய்களை குணப்படுத்தும் மகத்துவத்தினைக் கொண்டதாக முருங்கையிலை காணப்படுவதாகவும் அதன் காரணமாகவே முருங்கை மரக்கன்றுகள் வழங்கப்படுவதாகவும் கல்லடி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தெரிவித்தார்.
விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு முருங்கை மரக்கன்றுகளை விநியோகிக்கும் பணிகள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் ‘வாழ்க்கைக்கான தோட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக புதுவருடத்தில் தலையில் எண்ணை பூசும் சுபநேரத்திற்கு இணைவாக இந்த முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக முருங்கை மரத்தினை நடல் என்னும் தொனிப்பொருளில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஸவின் வழிகாட்டலில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 1000 மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது பெருமளவான மதஸ்தலங்களை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு முருங்கை மரங்களைப்பெற்றுக்கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு