மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்திருந்த தமிழ்த் திரை உலகின் நகைச்சுவை நடிகர் 'சின்னக் கலைவாணர்' விவேக் உடல், 78 குண்டுகள் முழங்க பூரண காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (ஏப்-17) அதிகாலை 04.35 மணியளவில் சென்னை, வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவேக் உடல் காலை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரம்பல் அச்சுறுத்தலையும் கடந்து காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அணி அணியாக தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணமே காணப்பட்டது.திரைப்பட நகைச்சுவை நடிகர் என்பதனையும் கடந்து சிறந்த சூழலியலாளராகவும், மனிநேயவாதியாகவும் பன்முக தளங்களில் தடம் பதித்திருந்தார் விவேக். அதனை மெய்ப்பிப்பதாகவே இன்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த அலைமோதிய மக்கள் பெரு வெள்ளம் அமைந்திருந்தது.
பெருந்திரளான பொதுமக்கள் ஒருபுறம் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க, திரையுலக பிரபலங்களும், அரசியல் தரப்பினரும் சமூக செயற்பாட்டாளர்களும் அணிதிரண்டு விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போதும் பெரும் எண்ணிக்கையான திரையுலக பிரபலங்கள், அரசியல் தரப்பினர், பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றிருந்தனர்.
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு அமைவாக, நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டு காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல்இ,மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.