சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அலெக்ஸே நவால்னியின் வலது கால் மரத்துப்போயுள்ளது. முதுகுவலியால் அவர் அவதியுற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மறுக்கப்பட்டால் சில நாட்களில் அவர் உயிரிழக்க நேரி்டலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் நவால்னி சிறையில் உயிரிழந்தால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அலெக்ஸே நவால்னியின் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் பெரும் ஊழல்-மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் விமானப் பயணம் ஒன்றின்போது விசம் வைத்து அவரைக் கொலை செய்ய முயசிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் ஜோ்மன் அழைத்துச் செல்லப்பட்ட அவா் தீவிர சிகிச்சையின் பின்னர் உயிர் பிழைத்தார்.
இதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா திரும்பிய நவால்னி, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
மிக மோசமான நிலைக்குப் பெயர்பெற்ற சிறையில் நவால்னி அடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்
எனினும் நவால்னி உயிருக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாக பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். அவரை சிறையில் சாக விடமாட்டோம் எனவும் அவா் கூறியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி நவால்னி கடந்த மார்ச் 31-ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றபோதும் ரஷ்ய அரசு தொடர்ந்து அவர் சிகிச்சை பெறும் உரிமையை மறுத்து வருகிறது.
இந்நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் நவால்னியின் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும். எந்நேரமும் அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் நவால்னிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது. முற்றிலும் பொருத்தமற்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நவால்னி சிறையில் இறந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். ரஷ்யா இதற்குப் பொறுப்புக் கூறியோ ஆக வேண்டும் என அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன் எச்சரித்துள்ளார்.