ஒன்ராறியோவில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடுவதற்கான வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்தத் தடுப்பூசி போடுவதற்கான பரிந்துரை இருந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதனை கனேடிய சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உறுதிப்படுத்தினார்.
ஒன்ராறியோவில் தொடர்ந்து கோவிட்-19 தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்குமாறு மாகாணஅரசுக்கு பரவலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்தே தடுப்பூசிகளை அதிகமானவர்களுக்குப் போடும் வகையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயதெல்லை 55 வயதுக்கு மேல் என இருந்த நிலையில் தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டக்கொண்ட சிலருக்கு இரத்த உறைவுச் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தத் தடுப்பூசியை இடைநிறுத்தியுள்ளன.
கனடாவில் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இரண்டாவது நபர் அரிதான இரத்தம் உறைவுச் சிக்கலாம் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் நன்மைகள் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக கனடா நம்புகிறது எனவும் அறிக்கை வலியுறுத்துகிறது.
கனேடிய சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை தெடர்ந்தும் கண்காணிந்த்து வருகின்றனர். ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அது குறித்து அறிக்கையிடுவார்கள் எனவும் கனேடிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கனேடியர் இரத்தம் உறைவு சம்பந்தமான சிக்கலால் பாதிக்கப்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. எனினும் இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுபோன்றதொரு இரண்டாவது சம்பவம் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
இரத்த உறைவு சிக்கல் குறித்த அச்சத்தை அடுத்து 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்குவதை நிறுத்துமாறு கனடா தடுப்பூசி ஆலோசனைக் குழு முன்னர் பரிந்துரைத்தது.
எனினும் இப்போது இந்த ஆலோசனையை அந்தக் குழு மாற்றியமைத்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் போட முடியும் என அறிவித்துள்ளது.
கனடா தனது தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட டசின் கணக்கான பிற நாடுகளை விட கனடா குறைந்த வீதத்திலேயே இதுவரை தடுப்பூசி போட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தடுப்பூசி வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ