இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பித்துள்ள நிலையில், நாடுதிரும்பியவர்களில் 70 பேர் உட்பட மேலும் 357 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 70 இலங்கையர்களுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரங்களில் இலங்கையில் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 70 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 70 பேரும் வெளிநாடுகளில் நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவா்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 45 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேபோன்று வெளிநாட்டிலிருந்து திரும்பிய 49 இலங்கையர்களுக்கு சனிக்கிழமையன்று தொற்று உறுதியானது.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் மத்தியில் அதிகளவு தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் நாடு திரும்புவோர் தொகையை மட்டப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியில் நிபுணர் டாக்டர்சுதாத் சமரவீர நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து வருவோரால் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவும் எச்சரித்துள்ளார்.
எனினும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு முழுமையான தடை விதிக்கப்படாது. கட்டுப்பாடுகளுடன் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை